அரசியலில் பரபரப்பு..! இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார் பிரேமலதா!

தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஏப்.30 ஆம் தேதி நடைபெறுகிறது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நடைபெறும் தேமுதிகவின் முதல் பொதுக்குழு கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பாலக்கோடு வெள்ளிச்சந்தை கே.வி.மஹாலில் நடைபெறும் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்கிறார்.
இந்தப் பொதுக்குழுவில் கட்சியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால அரசியலில் முக்கிய முடிவுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார். இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், அணி துணை செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர். புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, அந்தமான் ஆகிய மாநில கட்சி செயலாளர்களும் பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேமுதிகவுக்கு இளம் ரத்தம் பாய்ச்சும் விதமாக விஜய பிரபாகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். விஜய பிரபாகரனை கட்சியின் அடுத்த முகமாக தொண்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானதை அடுத்து, பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கட்சி இயங்கி வருகிறது.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் லோக்சபா தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன், சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். விஜய பிரபாகரனுக்கு கட்சியின் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை வழங்க வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஒருமுறை செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி அனைத்து மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களை அழைத்துப் பேசி விஜய பிரபாகரனுக்கு உரிய பதவி வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அதன் பிறகு தற்போது தான் தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. எனவே, இந்தப் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு, கடந்த லோக்சபா தேர்தலில் தேமுதிக, அதிமுக கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்டது. தற்போது அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், இந்தக் கூட்டணியில் இணைவது பற்றியும் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.