அரசியலில் பரபரப்பு..! தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரன் தான் காரணம்..!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்காகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததற்கு முதல் காரணமாகும். அதுதான் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சிறந்த காரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் கூட்டணியில் இணைந்தோம். தற்போதைய அரசியல் நிலைமை தமிழக பாரதீய ஜனதா கழகத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை. அண்மையில் பிரதமர் மோடி தமிழக வந்திருந்த போது, அவரை சந்திப்பதற்காக ஓ. பன்னீர் செல்வம் நேரம் கேட்டிருந்தார். அதனை நயினார் நாகேந்திரன் மூடி மறைத்து விட்டார். இது தொடர்பாக ஓ. பன்னீர் செல்வம் எஸ். எம். எஸ். அனுப்பி இருந்தார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எங்களை தேசிய ஜனநாயக கூட்டணி இணைத்தார். அவர் எனக்கு நல்ல நண்பர் போல இருந்தார். எனக்காக தேனீ தொகுதியை விட்டுக் கொடுத்தவர் ஓ. பன்னீர் செல்வம். அவருக்காக நான் பேசாமல் யார் பேசுவார். எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் தூக்கி பிடிக்கிறார். அவர் மட்டுமே போதும் என்று நயினார் நாகேந்திரன் எண்ணுகிறார். நயினார் நாகேந்திரன் செயல்பாடுகளால் தான் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி உள்ளோம். நயினார் நாகேந்திரன் அகங்காரத்தில் செயல்படுகிறார்.
எங்களை நயினார் நாகேந்திரன் திட்டமிட்டு வெளியேற்றியுள்ளார். நயினார் நாகேந்திரனுக்கு செலக்ட்டிவ் அமினீஷியா உள்ளது. தமிழக பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை நடு நிலையோடு செயல்பட்டார். நயினார் நாகேந்திரன் உள்ளொன்று வைத்துக் கொண்டு வெளியே ஒன்று பேசுகிறார். தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி பிளவு படுவதற்கு பின்னால் அண்ணாமலை இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அது தவறு. பழனிசாமியின் துரோகத்தை எதிர்த்து தொடங்கப்பட்டதே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். அப்படி இருக்கையில் பழனிச்சாமியின் தலைமை ஏற்றுக்கொண்டு நாங்கள் எப்படி கூட்டணி சென்றிருப்போம்.