வெற்றி துரைசாமியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி ..!
அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் ஒரே மகன் வெற்றி துரைசாமி. இவர் இமாச்சலப் பிரசேதத்துக்கு கடந்த மாதம் சுற்றுலா சென்றிருந்த நிலையில், பிப்ரவரி 4-ம் தேதி அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கார் ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், நிலைத்தடுமாறிய கார் அங்கு ஆர்ப்பரித்து ஓடும் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விழுந்தது. இதில் ஓட்டுநர் மற்றும் நண்பரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், வெற்றி துரைசாமியின் உடல் மட்டும் காணாமல் போனது.
இதையடுத்து, 8 நாள் தீவிர தேடுதலுக்கு பிறகு சட்லெஜ் நதியின் அடியில் உள்ள ஒரு பாறையில் சிக்கியிருந்த வெற்றி துரைசாமியின் உடலை ஸ்கூபா டைவர்கள் நேற்று கண்டெடுத்து மீட்டனர்.ஏற்கனவே பல நாட்கள் தண்ணீருக்குள் இருந்ததால் உருக்குலைந்து போயிருந்த அவரது உடல் சீக்கிரம் அழுகிப் போவதை தடுப்பதற்காக எம்பாமிங் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரது உடல் அங்கிருந்து தனி விமானம் மூலமாக சென்னைக்கு இன்று காலை புறப்பட்டது. இந்நிலையில், மாலை 4.00 மணியவில் சென்னை விமான நிலையத்திற்கு வெற்றியின் உடல் வந்திறங்கியது.
அப்போது அவரது உடலை பார்த்த உறவினர்களும், நண்பர்களும் கதறி அழுதனர். இந்நிலையில் வெற்றி துரைசாமியின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
மகனின் உடலை பார்த்ததும் சைதை துரைசாமி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது
வெற்றி துரைசாமி உடலுக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சைதை துரைசாமிக்கு ஆறுதல் கூறினார்