குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ் - பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு..!
உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார் முத்துகுமார்.நேற்று முன் தினம் டாஸ்மாக்கில் மது அருந்தும்போது கஞ்சா வியாபாரியான பொன்வண்ணன் உள்ளிட்டோருக்கு திருந்தி வாழும்படி அறிவுரை வழங்கியுள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் முத்துக்குமாரை பொன்வண்ணன் உள்ளிட்டோர் கல்லால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அறிவுரை கூறிய காவலரை ரவுடி கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கேரளா தப்ப முயன்ற பொன்வண்ணனை போலீசார் தேனி அருகே துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
இதுதொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், உசிலம்பட்டி காவலர் முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரவுடி பொன்வண்ணன் என்பவரை கம்பம் அருகே தமிழக காவல் துறை என்கவுண்டர் செய்யப்பட்டார் என்ற செய்தி வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக காவல் துறை இதுபோன்று சிறந்த முறையில் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினால் தான், குற்ற வழக்குகளை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என்ற பிரேமலதா, “தேமுதிக சார்பாக காவலர் முத்துக்குமாரை படுகொலை செய்த ரவுடி பொன்வண்ணனையும் என்கவுண்டர் செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று நேற்று தெரிவித்து இருந்தோம்” என்று சுட்டிக்காட்டினார்.
செயின் பறிப்பு கொள்ளையில் ஈடுபட்டவர்களை என்கவுண்டர் செய்தது போல், அதே பாணியில் காவலரை அடித்துக் கொலை செய்தவர்களையும் என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம் என்றும், அதை உடனடியாக இன்று செயல்படுத்திய தமிழக காவல்துறைக்கு தேமுதிக சார்பாகவும், விஜயகாந்த் சார்பாகவும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், “இரும்பு கரம் கொண்டு அடக்கினால் மட்டுமே, இதுபோன்ற குற்றச்செயல்கள் இனிவரும் காலங்களில் நடக்காத வண்ணம் தமிழக மக்களை காப்பாற்ற முடியும். ஆகவே, சிறந்த முறையில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகள்” என்றும் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.