திடீர் திருப்பம் : காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற எதிர்ப்பு..!
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு வியாபாரிகள் 2020 ஜூன் 19ஆம் தேதி காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணையின்போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர்கள் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 9 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மொத்தம் 2,427 பக்கங்கள் கொண்ட இரண்டு கட்ட குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த கொலை வழக்கு கடந்த நான்கு வருடங்களாக மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தான் அப்ரூவராக மாற அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஸ்ரீதர் தனது மனுவில், "நான் அப்ரூவல் ஆக மாற விரும்புகிறேன். என்னை தவிர்த்து மற்ற காவலர்கள் செய்த அனைத்து செயல்களையும் உண்மைகளையும் நீதிமன்றத்தில் கூற விரும்புகிறேன். எனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தையும் மகனையும் இழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன், இந்த வழக்கில் அப்ரூவராக மாறி அரசு தரப்பு சாட்சியாக மாற விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னை மன்னித்து விடுதலை வழங்கினால், அப்ரூவராக மாறி நடந்த உண்மைகளை கூற தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதாவது, தான் குற்றவாளி இல்லை என்றும், மற்றவர்கள் செய்ததை சொல்ல தயாராக இருப்பதாகவும் கூறினார்.
ஸ்ரீதர் தாக்கல் செய்த மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன்பு விசாரணைக்கு வந்தது. ஸ்ரீதர் மதுரை மத்திய சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
ஸ்ரீதர் அப்ரூவராக மாறுவதற்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்ப உறுப்பினர் செல்வராணி மற்றும் சிபிஐ தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தந்தை மகன் கொலை வழக்கு மற்றும் ஸ்ரீதர் அப்ரூவராக கோரிய மனுக்கள் மீதான விசாரணையை ஜூலை 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அப்ரூவர் என்றால் குற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒருவர், குற்றத்தை பற்றி முழுமையாக நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு வழக்கிலிருந்து விடுதலையாகலாம். ஆனால், இந்த வழக்கில் சிபிஐ மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஸ்ரீதர் அப்ரூவராக மாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், ஸ்ரீதர் அப்ரூவராக மாறுவாரா என்பது ஜூலை 28ஆம் தேதி தெரியும்.