1. Home
  2. தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை செய்த நபரை என்கவுண்டர் செய்த போலீசார்..!

1

உ.பி.யை சேர்ந்தவர் மனோஜ் குமார் என்ற உத்தம். இவர் தனியாக வீட்டில் இருக்கும் பெண்கள் அல்லது தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து, துப்பாக்கி முனையில் மிரட்டி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது பல வழக்குகள் உள்ளது.

அதிலும், கடந்த மே 26ஆம் தேதி தனியாக நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டிக்கு லிப்ட் கொடுப்பதாக கூறி பைக்கில் ஏற்றி வந்து, மறைவான ஒரு இடத்தில் வைத்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், அவரிடம் இருந்து நகையையும் மனோஜ் குமார் பறித்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக மனோஜ் குமார் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து, அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டினர்.

இந்த நிலையில், அவர் மதுரா பகுதியில் பதுங்கி இருப்பதாக கடந்த வியாழக்கிழமை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் பெயரில் அங்கு சென்ற போலீசார், ஜெகதீஷ்பூர் யமுனா நெடுஞ்சாலையில் வைத்து மனோஜ் குமாரை பிடிக்க முயன்றுள்ளனர்.

அப்போது, அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை சுட முயன்றுள்ளார். இதனால் போலீசாருக்கும், அவருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

இதில் காலில் காயமடைந்தவாறு கைது செய்யப்பட்ட மனோஜ் குமார், மாவட்ட அரசு மருத்துவமனையில் அதிகாலை 3 மணி அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து மனோஜ் குமார் தப்பித்துள்ளார். இதனை அடுத்து விரட்டிச் சென்ற போலீசாரை நோக்கி மனோஜ் குமார் மீண்டும் சுடத் தொடங்கியுள்ளார். இதனால் தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் மனோஜ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இது தொடர்பாக மனோஜ் குமாரை தப்பிப்பதற்கு உதவியதாக இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மதுரா சிறப்பு காவல் கண்காணிப்பாளர் சைலேஷ்குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like