நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினரை போலீசார் கைது..!
சென்னை கிண்டியில் செயல்படும், அண்ணா பல்கலையில், 19 வயது மாணவி படித்து வருகிறார். அவர் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து, போலீஸ் கமிஷனர் அருணிடம் புகார் அளித்தார். கோட்டூர்புரம் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாதேவி தலைமையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முடிவில், நடைபாதை பிரியாணி வியாபாரி ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். மாணவிக்கு நேரிட்ட கொடுமையை கண்டித்து அ.தி.மு.க., பா.ஜ.,வினர் இன்று போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் கவர்னர் தமிழிசை, மாநிலத் துணைத் தலைவர் கருநாகராஜன், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை கிண்டியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீசாருக்கும், தொண்டர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
போலீசிடம் வாக்குவாதம் செய்துகொண்டே சாலையின் சென்டர் மீடியனில் ஏறிய ஜெயக்குமார், மைக்கை கையில் பிடித்து மூச்சு வாங்க ஆவேசமாக கத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அ.தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்தனர்.