1. Home
  2. தமிழ்நாடு

பா.ம.க. நகரச் செயலாளர் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை..!

1

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பூ வியாபாரி நாகராஜ். இவர் பா.ம.க.வின் நகரச் செயலாளராகப் பதவி வகித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (ஜூலை 09) இரவு 09.45 மணியளவில் வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு, வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், நாகராஜை வழி மறித்து, சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியுள்ளனர். படுகாயமடைந்த நாகராஜை மீட்ட பொதுமக்கள், ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும், செல்லும் வழியிலேயே நாகராஜ் உயிரிழந்தார். தகவலறிந்து மருத்துவமனையில் திரண்ட நாகராஜின் உறவினர்களும், பா.ம.க.வினரும் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர். செங்கல்பட்டு- மதுராந்தகம் சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து கலைந்துச் சென்றனர்.

இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்த வடக்கு மண்டல காவல்துறைத் துணைத் தலைவர் பகலவன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

காவல்துறையினரின் விசாரணையில் நாகராஜை வெட்டியவர்கள், பரனூர் வழியே சென்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் தப்ப முயன்ற அஜய் என்பவரை காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். அப்போது, அவர் காவல்துறையினரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்றதால், அவரை இடதுகாலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

அஜய்யை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், கார்த்திக் என்ற மற்றொருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்றவர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like