1. Home
  2. தமிழ்நாடு

பாமக தலைவராக ராமதாஸ் – சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்..!

1

பட்டானூரில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், நிறுவனர் ராமதாஸ் கட்சித் தலைவராக பொறுப்பேற்பார் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு ராமதாஸ் தலைமை வகித்தார்; பொதுச் செயலாளர் முரளிசங்கர் வரவேற்றார். மேடையில் ராமதாஸ் அருகில் அவரது மகள் ஸ்ரீகாந்திக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.

முதல் தீர்மானத்தை வாசித்த கவுரவத் தலைவர் கோ.க. மணி, “அங்கீகாரம் இழந்த பாமகவை மீண்டும் பலப்படுத்த, அமைப்பு விதி 13-ல் திருத்தம் செய்து, தலைவராக ராமதாஸ் செயல்படுவார்” என்று அறிவித்தார். உடனே தொண்டர்களும் நிர்வாகிகளும் எழுந்து நின்று ஆரவாரம் செய்தனர். அவர்களை நோக்கி ராமதாஸ் வணங்கினார்.

பின்னர் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களில் – சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் முழு அதிகாரத்தை ராமதாஸுக்கு வழங்குவது, வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டுக்காக போராடுவது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுக அரசை கண்டிப்பது, புதிய அமைப்பு விதி 35 மூலம் கூட்டணி பேச்சுவார்த்தை அதிகாரம் ராமதாஸுக்கு வழங்கப்படுவது ஆகியவை அடங்கும்.

மேலும், மதுவிலக்கு அமல்படுத்தல், ஆறுகளில் 5 கி.மீ. தொலைவில் தடுப்பணை அமைத்தல், காவிரி–கோதாவரி திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டம், முல்லைப்பெரியாறு அணையை 152 அடி உயர்த்துதல், கச்சத்தீவு மீட்பு, ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புதல், மேகேதாட்டு அணைத் திட்டத்தைத் தடுக்குதல், நீட் விலக்கு, நெல் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட 36 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

அதே நேரத்தில், அன்புமணிக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகள் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையை கோ.க. மணி வாசித்தார். அதில், “மைக் வீசியது, அனுமதியின்றி பொதுக்குழு கூட்டம் நடத்தியது, சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியது, தலைமையை பிளவுபடுத்தியது, பசுமை தாயகம் அமைப்பை கைப்பற்றியது, தலைமை அலுவலகத்தை மாற்றியது” உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இடம் பெற்றன. இதற்கான நடவடிக்கை ராமதாசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசினார் ராமதாஸ்: “ஒரு சமூகத்துக்காக அல்ல, தமிழகத்தின் 8 கோடி மக்களுக்காகவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சிறைக்கு சென்றதெல்லாம் ஒரு ஜாதிக்காக அல்ல, 324 சமூகங்களுக்காக. அனைத்து மக்களுக்காக போராடியுள்ளேன்.

அதிமுக கூட்டணிக் காலத்தில் 10.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது; ஆனால் உச்சநீதிமன்றத்தில் சிக்கியது. இப்போது மீண்டும் அதற்காக போராடுவோம். கூட்டணி அமைப்பதற்கான அதிகாரத்தை நீங்கள் அளித்துள்ளீர்கள்; விரும்பும் கூட்டணியை அமைப்பேன். ஜாதிவாரி கணக்கெடுப்பை ஸ்டாலின் செய்ய மறுக்கிறார். உள்ள தரவுகளை வைத்து ஒரு வாரத்தில் 10.5% இடஒதுக்கீடு வழங்க முடியும். ஆனால் அவர் தவிர்க்கிறார். நாங்கள் போராடாமல் இருக்கமாட்டோம்” என்றார்.

கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் அன்பழகன், எம்எல்ஏ அருள் உள்ளிட்ட 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி சென்னை பொதுக்குழுவில் அன்புமணியின் புகைப்படம் இடம்பெற்றதே இல்லை என்பதும் கவனத்துக்கு வந்தது.

Trending News

Latest News

You May Like