பிரதமர் மோடியின் திருப்பூர் பயணம் ரத்து..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/c9e208709cebde8a7472dc25f6338b5e.jpg?width=836&height=470&resizemode=4)
பிரதமர் மோடி கடந்த 2-ம் தேதி திருச்சிக்கு வருகை தந்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் , பிறகு திருச்சி புதிய விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்ததுடன், பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க நேரில் வருமாறு பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் மோடியை நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதற்கான அழைப்பிதழை வழங்கினார். அதை தொடர்ந்து பிரதமர் மோடி வருகை தருவதாக உறுதியளித்ததாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்கும் போது கூறியிருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் நடைபெறும் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகிற 19-ம் தேதி சென்னை வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திருப்பூர் செல்லும் அவர் பா.ஜ.க., சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் இ.எஸ்.ஐ., மருத்துவமனையை திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், திருப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்பதாக இருந்த பொதுக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள தினத்தன்று பொதுக்கூட்டம் நடக்க உள்ளதாக மாவட்ட பாரதிய ஜனதா தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.