கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார் - கார்கே விமர்சனம்..!
கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கு நாளை 26-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கிட்டத்தட்ட 10-12 மாநிலங்களுக்குப் பிரதமர் மோடி பயணம் செய்ததாகவும், அங்குள்ள வாக்காளர்களிடமிருந்து கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.
ஆனால் கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார். அதனால்தான் அவர் எப்போதும் காங்கிரசை விமர்சித்து வருகிறார். காங்கிரஸ் என்ற கட்சியே இல்லை என கூறிவரும் அவர், பிறகு எதற்காக எங்கள் கட்சியை பற்றி கவலைப்பட வேண்டும்?
வெற்றிப் பெறுவோம் என பா.ஜனதாவுக்கு அதிக நம்பிக்கை இருந்தால், எதற்காக ஊழல்வாதிகளை பா.ஜ.க.வில் சேர்க்கிறீர்கள்? அவர்கள் காங்கிரசிலோ அல்லது வேறு ஏதாவது கட்சியிலோ இருந்தால் அவர்களை பெரிய ஊழல்வாதிகள் எனக் கூறுவார்கள்.
பிரதமர் மோடி, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் தருவதாக கூறினார். காங்கிரஸ் கட்சியினர் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை மீட்டு கொண்டுவருவேன் என்றார். அந்த பணமெல்லாம் எங்கே?
அடுத்த தேர்தலில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக கூறினார். விவசாயிகளின் இரட்டிப்பு வருமானம் எங்கே? தற்போது மோடியின் கியாரண்டி என பேசி வருகிறார். தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டோம் என்பதே மோடியின் கியாரண்டி . வாக்குகளுக்காக இந்த விளையாட்டுகளை எல்லாம் பிரதமர் மோடி விளையாடுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.