மான் கீ பாத் நிகழ்வில் பிரதமர் : அனைவரும் தாயின் பெயரில் மரக்கன்றுகளை நட வேண்டும்..!
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற மோடி நேற்று 111-வது மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தாயின் பெயரில் ஒரு மரம் என்ற சிறப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. நான் எனது தாயின் பெயரில் ஒரு மரத்தை நட்டுள்ளேன்.
நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தாயுடன் சேர்ந்து அல்லது அவரது பெயரில் ஒரு மரத்தை நடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அடுத்த மாதம் இந்த நேரத்தில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி இருக்கும். ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த நீங்கள் அனைவரும் காத்திருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.
டோக்கியோவில் நமது வீரர்களின் ஆட்டம் ஒவ்வொரு இந்தியரின் மனதையும் வென்றது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து, நமது விளையாட்டு வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு முழு மனதுடன் தயாராகி வருகின்றனர்.
வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்க சீயர்4பாரத் என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்துமாறு மக்களை வலியுறுத்துகிறேன். இந்தியாவின் பல தயாரிப்புகள் உலகம் முழுவதும் பெரும் தேவையுடன் உள்ளன.
அத்தகைய தயாரிப்புகளில் ஒன்று அரக்கு காபி. ஆந்திராவின் அல்லூரி சீதாராம் ராஜு மாவட்டத்தில் அரக்கு காபி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது அதன் வளமான சுவை மற்றும் நறுமணத்திற்காக பிரபலமாக உள்ளது.
சுமார் 1.5 லட்சம் பழங்குடியின குடும்பங்கள் அரக்கு காபி சாகுபடியுடன் தொடர்புடையவை. ஒரு முறை விசாகப்பட்டினத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இந்த காபியை ருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது நினைவிருக்கிறது.
அரக்கு காபி பல உலகளாவிய விருதுகளை பெற்று உள்ளது. டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டி லும் இந்த காபி பிரபலமாக இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.