இனி திருமலையில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் விற்பதற்கு தடை..!!
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருப்பதி ஏழமலையான் திருக்கோவில், உலக அளவில் மிகவும் புகழ் பெற்றது. திருப்பதியில் ஏழுமலைகள் மீது கோவில் கொண்டுள்ள ஏழுமலையானை, வெங்கடாஜலபதி, திருவேங்கடவன், மலையப்பசாமி என பல்வேறு பெயர்களில் பக்தர்களால் அன்போடு அழைக்கின்றனர்.
திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிப்பதற்காக உலகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் தினந்தோறும் திருமலையில் குவிந்து வருவது வழக்கம்.
தற்போது கொரோனா சூழலில் இருந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் தினசரி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிகின்றனர். திருமலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில்,திருமலைக்கு வரும் பக்தர்கள் யாரும் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வரக் கூடாது. ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உறுதிபடுத்த வேண்டியது நமது கடமை. அதிகாரிகள் தொடர் ஆய்வில் ஈடுபடுவர் என திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி ஏ.வி. தர்மா ரெட்டி கூறினார்.
மேலும், அலிபிரியில் இருந்து வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் இருக்கின்றனவா என்று சோதனை செய்த பின்னரே அனுமதிப்பர். திருமலையில் உள்ள கடைகள், ஓய்வறைகள் உள்ளிட்டவற்றில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த தடை என கூறினார். கடைகளிலும் காப்பர் அல்லது ஸ்டீல் பாட்டில்களில் தான் பக்தர்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் எனவும் கூறினார்.
அடுத்த இரண்டு மாதங்களில் பிளாஸ்டிக் இல்லாத திருமலையை உருவாக்குவதே நமது நோக்கம். இதனை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம் என தெரிவித்தார்.