தலைசிறந்த தலைநகரை உருவாக்க வேண்டும் என்பதற்காக மக்கள் பா.ஜ.,விற்கு ஓட்டளித்து உள்ளனர் - பிரதமர் மோடி..!

டில்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., 48 தொகுதிகளை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. இதனால், அக்கட்சி தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ., தலைமையகத்தில் நடந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தலைவர் நட்டா உள்ளிட்டோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:*சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை மக்கள் கொடுத்துள்ளனர்.
*சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுத்த மக்களுக்கு எனது வணக்கங்கள்.
*தலைசிறந்த தலைநகரை உருவாக்க வேண்டும் என்பதற்காக மக்கள் பா.ஜ.,விற்கு ஓட்டளித்து உள்ளனர். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
*தற்போது மக்கள் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளனர். தற்போது ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்து டில்லி விடுதலை பெற்றுள்ளது.
*இந்த வெற்றியில் ஒவ்வொரு பா.ஜ., தொண்டருக்கும் பங்கு உண்டு. அவர்கள் கடுமையாக உழைத்தனர்.
*இரட்டை இன்ஜின் அரசு டில்லியின் முன்னேற்றத்திற்கு கடினமாக உழைக்கும். இரட்டை இன்ஜின் அரசு மீதான நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
*டில்லி இனிமேல் இரட்டை வேகத்தில் முன்னேறும்.
*மக்கள் எங்களுக்கு அளித்த அன்பை இரண்டு மடங்காக திருப்பித் தருவோம்.
*ஷார்ட்கட் அரசியல், ஷார்ட் சர்க்யூட் ஆகி விட்டது.
*லோக்சபா தேர்தலில் டில்லி மக்கள் என்னை எப்போதும் ஏமாற்றியது இல்லை. கடந்த 3 தேர்தல்களிலும் 7 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெற்றது.
லோக்சபா தேர்தல் வெற்றிக்கு பிறகு, ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவில் சாதனை படைத்து இருந்தோம். தற்போது டில்லியிலும் படைத்துள்ளோம்.
*டில்லி என்பது சாதாரண நகரம் அல்ல. அது மினி இந்தியா.
*இனிமேல் டில்லி இளைஞர்கள் சிறந்த நிர்வாகத்தை உணர்வார்கள்.
*பன்முகத்தன்மை வாய்ந்த டில்லி, இந்த வெற்றி மூலம் பா.ஜ.,விற்கு ஆசி வழங்கி உள்ளது.
*டில்லியில் அராஜகம் மற்றும் அகங்காரத்திற்கு மக்கள் முடிவு கட்டி உள்ளனர்.
*நானும் பூர்வாஞ்சல் பகுதியில் இருந்து எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டவன் எனப் பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். இப்பகுதி மக்கள் பா.ஜ.,விற்கு ஆதரவு அளித்து உள்ளனர். டில்லியில் ஒவ்வொரு மூலையிலும் தாமரை மலர்ந்துள்ளது.