1. Home
  2. தமிழ்நாடு

செலவு செய்து ஓட்டு போட வேண்டுமா என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர் - பிரேமலதா..!

1

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு பேருந்து கட்டணம், ரயில் கட்டணம் மற்றும் அனைத்து போக்குவரத்து கட்டணங்களும் அதிகமாக இருப்பதனால் செலவு செய்து ஓட்டு போட வேண்டுமா என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர். தேர்தல் வரும் ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் தான் வருகிறது. எனவே, வெயிலின் தாக்கம் அதிகம் என்கிற காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

தேர்தல் ஆணையம் நூறு சதவீதம் வாக்கு செலுத்த வேண்டும் என்று விளம்பரம் செய்தாலும், மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இதில் முக்கியமாக சென்னை போன்ற மாநகரங்களில் வசதியானவர்கள், படித்தவர்கள், அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் வாக்களிப்பதை பெருமளவில் விரும்புவதில்லை என்பது வேதனையளிக்கிறது. நாம் யாருக்கு வாக்களித்தால் என்ன மாற்றம் வரப்போகிறது என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்களா என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. ஏற்கெனவே வெற்றி பெற்றவர்களும் தொகுதி பக்கம் அதிகம் செல்வதில்லை.

தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில்லை, அதுமட்டுமல்லாமல் இன்றைக்கு நிலவுகின்ற வேலையின்மை, வறுமை, அன்றாட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கூட ஆளில்லை.

யாருக்கு வாக்களித்தால் என்ன என்ற மக்களின் வேதனையான மனநிலையை தான் இது நிரூபிக்கிறது. இதெல்லாம் மாறவேண்டும் என்றால் மத்திய, மாநில ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். ஆனால், ஆளும் ஆட்சியாளர்களோ வாக்கிற்கு காசு கொடுத்தும், ஒட்டு மொத்த மீடியாவையும் பயன்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்ற போக்கில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

எனவே, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். வாக்களித்த மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என்ற பாடத்தை இந்த தேர்தல் மூலம் கற்றுள்ளனர்.

எனவே, தேர்தல் ஆணையமும், காவல்துறையும், நீதித்துறையும், ஆட்சியாளர்களும் வாக்களிப்பதன் அவசியத்தையும், நம்பிக்கையையும் மக்களுக்கு இனிவரும் காலங்களில் உறுதியாக ஏற்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like