1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் முக்கிய வழிகாட்டுதல்கள்..!

1

கோடை வெப்பத்தில் இருந்து மாடு, எருமை, ஆடு மற்றும் கோழி உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகளை கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்டுள்ளது. கால்நடைகளுக்கு உயர் வெப்பத்தால் ஏற்படும் அயற்சி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகமாக உமிழ்நீர் வடிதல், அதிகமாக தண்ணீர் பருகுதல், பகலில் குறைவாக தீவனம் உட்கொள்ளுதல், நிழலில் தஞ்சம் புகுதல், வாயைத் திறந்த நிலையில் வேகமாக சுவாசித்தல் போன்றவை வெப்ப அயற்சியின் அறிகுறிகளாகும்.

வெப்ப அயற்சியில் இருந்து கால்நடைகளைக் காப்பாற்றுவதற்கு கால்நடைகளை காலை மற்றும் மாலை நேரங்களில் வெயிலுக்கு முன்பும், பின்பும் மேய்ச்சலுக்கு விடவேண்டும். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மேய்ச்சலுக்கு விடுவதைத் தவிர்க்க வேண்டும். கறவை மாடுகளுக்கு ஒருநாளைக்கு 4 முதல் 5 முறையாவது உகந்த தண்ணீர் கொடுக்க வேண்டும். எப்பொழுதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் தண்ணீர் தொட்டியை அமைக்க வேண்டும். தண்ணீரின் மீது கலப்பு தீவனத்தை சிறிதளவு தூவும்போது கால்நடைகள் அதிக தண்ணீர் குடிக்கும்.

தாது உப்புக்கலவை, வைட்டமின்கள் கொடுப்பதன் மூலம் வெப்ப அயற்சி அறிகுறிகள் குறைவதுடன் உற்பத்தி குறையாமல் இருக்கும். நீர் தெளிப்பான்கள், மின்விசிறிகளை கொட்டகைகளில் பயன்படுத்துவதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம். கோடைக்காலத்தில் அதிகமாக பசுந்தீவளம் கொடுப்பதோடு அவற்றிற்கு அளிக்கும் தீவனங்களை பல பிரிவுகளாக பிரித்து இடைவெளி விட்டு ஒருநாளைக்கு 3 அல்லது 4 வேளைகளாக பிரித்து அளிக்கலாம். ஆடுகளுக்கு ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 12 லிட்டர் சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும். ஆடுகளுக்கு தடுப்பூரிகளை உரிய காலத்தில் செலுத்த வேண்டும். 

பொதுவாக கொடுக்காபுல், வாகை, சேம்பு, கருவேல், சூபாபுல், மா, பலா, ஆல், அகத்தி, அரசு போன்ற மரங்களின் இலைகள் ஆடுகளுக்கு சிறந்த உணவாகும். கோடையில் கிடைக்கும் புரதச்சத்து மிக்க வெல்வேல், கருவேல் உலர் காய்களை ஆடுகளுக்கு உணவாக கொடுக்கலாம். பருவ மழைக்காலங்களில் பசுந்தீவனம் அதிகமாக இருக்கும்பொழுது அவற்றினை ஊறுகாய் தீவனமாக மாற்றி சேமித்து அவற்றை ஆடுகளுக்கு தீவனமாக அளிக்கலாம். வேளாண் உபபொருட்கள் அல்லது மர இலை அல்லது புண்ணாக்கினை தீவனமாக அளிக்கலாம்.

கோழிகளுக்கு விடியற்காலை பொழுதிலும், இரவிலும் தீவனம் அளிக்க வேண்டும். சுத்தமான குளிர்ந்த குடிநீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குடிநீரில் வைட்டமின்கள் பி.காம்ப்ளெக்ஸ், குளுக்கோஸ் கலந்து கொடுக்கலாம். அதிக இடவசதி உள்ள இடத்தில் உயரமான கூரை அமைத்து குறைவான எண்ணிக்கையில் கோழிகளைப் பராமரிக்க வேண்டும். செல்லப்பிராணிகளை காரில் உள்பகுதியில் அடைத்து வைப்பதையும், நேரடியாக வெயில் படுமாறு உலாவ விடுவதையும் தவிர்க்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளில் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள், தாது உப்புக்கலவைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுமாயின் 1962 ஆம்புலன்ஸ் ஊர்திகள் மூலம் மருத்துவ உதவி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like