1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! தேர்தலுக்கு பின் 500 ரூபாய் கேஸ் விலை உயர வாய்ப்பு : உதயநிதி..!

Q

பாராளுமன்ற மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, நேரடியாக மக்களை சந்தித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நெல்லையில் பரப்புரையில் ஈடுபட்ட நிலையில், நேற்று தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

அதேபோல், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது :

“மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அண்ணாதுரையை வெற்றி பெறச் செய்ய வேண்டும். 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அண்ணாதுரையை வெற்றி பெறச் செய்தால், மாதம் 2 முறை நான் வந்து உங்களோடு தங்கி, தொகுதி பிரச்னையை அண்ணாதுரையுடன் இணைந்து தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன். இது என்னுடைய வாக்குறுதி.திமுகவுக்கு தூக்கம் போய்விட்டது என்று பிரதமர் மோடி கூறினார். ஆம், எங்களின் தூக்கம் போய்விட்டது. உங்களை ஆட்சியில் இருந்து அகற்றி வீட்டுக்கு அனுப்பும் வரை நாங்கள் தூங்கப்போவது இல்லை. தூங்காமல் நாங்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபடப் போகிறோம். 

பிரதமர் மோடி நாடகமாடுகிறார். சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைப்பதாகக் கூறும் மோடி, தேர்தலுக்கு பின் 500 ரூபாய் உயர்த்துவார். முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 500 ரூபாயாக சிலிண்டர் விலையை குறைப்போம் என்று வாக்குறுதி அளித்துள்ளார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மகளிருக்கு உரிமைத்தொகை உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

நான் எப்போதும் கல்லை தூக்கி காட்டுவதாக இபிஎஸ் விமர்சிக்கிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்வரை இந்த கல்லை நான் கொடுக்கமாட்டேன். நான் கல்லை காட்டுகிறேன். ஆனால் அவர் பல்லை காட்டுகிறார். மிக்ஜாம் புயலின்போது சென்னை முழுவதும் மூழ்கியது. அனைத்து அமைச்சர்களும் மக்களுக்காக பணியாற்றினார்கள். ஆனால், பிரதமர் மோடி எதுவும் கண்டுகொள்ளவில்லை.”

இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.

Trending News

Latest News

You May Like