மக்களே உஷார்..! கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரூ.2 லட்சம் பணம் திருட்டு..!
இதன்படி, எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் இன்று காலை 9 மணிக்கு கோவை மாவட்டத்தில் தொடங்கியது. அதன்படி, மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டி வன பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு, அவர் சுற்றுப்பயணம் தொடங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். பா.ஜ.க. சார்பில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வன பத்திரகாளி அம்மன் கோவிலை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் சாலை மண்டபத்தில் விவசாயிகளுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுகிறார். தொடர்ந்து மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை, காந்தி சிலை அருகே 'ரோடு ஷோ' மூலம் மக்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். மக்களுடன் உரையாடுகிறார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பேரிடம் பணம் திருடப்பட்டு உள்ளது. இவற்றில் 2 பேரிடம் தலா ரூ.1 லட்சமும், ஒருவரிடம் ரூ.2,500 பணமும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்து 500 கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
இதில், தேக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் துணை தலைவர் தங்கராஜிடம் ரூ.1 லட்சமும், ஆனந்த் என்பவரிடம் ரூ.1 லட்சமும் மற்றும் அபு என்பவரிடம் ரூ.2,500 பணமும் திருடப்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.