மக்கள் அதிர்ச்சி..! ஒடிசா ரயில் விபத்து நடந்த அதே நாளில் பஞ்சாப் மாநிலத்தில் ரயில் விபத்து..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/a1148fec211e90dfe8ebea470caa71b8.webp?width=836&height=470&resizemode=4)
ரயில்களில் அடிக்கடி விபத்து நடைபெறவது சமீப காலங்களில் வழக்கமாகிவிட்டது. கடந்த ஆண்டு இதே நாளில் கொல்கத்தாவின் ஹவுராவில் இருந்து தமிழ்நாடு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரிசாவில் பெரும் விபத்தில் சிக்கியது. இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்தாக அறியப்படும் இந்த விபத்தில் சுமார் 296 பேர் வரை பலியாகினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒடிசா ரயில் விபத்து நடந்த அதே நாளில் பஞ்சாப் மாநிலத்தில் ரயில் விபத்து ஒன்று நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் மாதோபூர் அருகே சிர்ஹிந்த் என்ற இடத்தில் நேற்று காலை இரண்டு சரக்கு ரயில்கள் மோதிக்கொண்ட பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஆகவில்லை.இரண்டு ரயில்களின் லோகோ பைலட்டுகள் மட்டும் காயமடைந்தனர்.லோகோ பைலட்டுகளில் ஒருவரான விகாஸ் குமாருக்கு தலையிலும், மற்றொருவரான ஹிமானுஸ் குமாருக்கு பின்புறத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே காவல் துறையினர் கூறுகையில், “ சிர்ஹிந்த் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பின்புறம் வந்த மற்றொரு ரயில் மோதியதில் இரண்டு லோகோ பைலட்டுகள் காயமடைந்தனர்” என்று தெரிவித்தனர்.
மேலும், “இந்த விபத்தில் ஒரு சரக்கு ரயிலின் எஞ்சின் கவிழ்ந்து மற்றொரு தண்டவாளத்தின் மீது விழுந்ததில், அது பயணிகள் ரயில் மீதும் மோதியது” என்று தெரிவித்தார். எனினும், பயணிகள் ரயிலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில் விபத்து சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.