அதிர்ச்சியில் மக்கள்..! கேரள சிறுமிக்கு ரேபிஸ் பாதிப்பு...!

தமிழகத்திலும் தெரு நாய் தொல்லை அதிகரித்து வருவதால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தெருநாய்த் தொல்லைப் பிரச்னைக்கு முடிவுகட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இவ்வாறாக நாய்க்கடி தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ள சமயத்தில், அதற்கான தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் பயனில்லை என்ற தகவல் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த எட்டு வயது சிறுமியை கடந்த மாதம் 8-ஆம் தேதி தெரு நாய் ஒன்று முழங்கையில் கடித்தது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அங்கு உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதும் அடுத்தடுத்து மூன்று தவணைகளை தடுப்பூசி செலுத்த வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி மாணவியும் செலுத்திக் கொண்டார். இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தி கொண்ட சில நாட்களில் சிறுமியின் உடலில் நாய்க்கடியின் வீரியம் அதிகரித்து சுகவீனம் ஏற்பட்டது. மீண்டும் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில், சிறுமிக்கு ரேபிஸ் தொற்று பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான தடுப்பூசி செலுத்திய போதிலும் சிறுமி ரேபிஸ் தோற்றுக்கு ஆளானது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மாணவியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.