மக்கள் பீதி..! இன்று முதல் கொரோனா பரிசோதனை தொடக்கம்!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பெங்களூரு அருகே உள்ள ஒசக்கோட்டை பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதியின் 9 மாதமே ஆன ஆண் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை அடுத்து, அந்தக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதை அடுத்து, குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், அண்மையில் ஒரே நாளில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண் உள்பட 19 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35- ஆக உயர்ந்திருந்தது.
இந்த நிலையில், நேற்று (மே 24) ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 40-ஆக உயர்ந்தது. இந்த நிலையில், புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெங்களூரு புறநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், கர்நாடக மாநிலத்தில் புதிய வகை கொரோனா தொற்றுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளது. பெரிய அளவிலான எந்த பாதிப்பும் இல்லை. எனவே, கர்நாடக மாநில பொது மக்கள் யாரும் தேவையின்றி அச்சப்பட வேண்டாம். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிந்து கொண்டு செல்வது நல்லது. மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று பரிசோதனையை மேற்கொள்வதற்கு சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, மாநிலம் முழுவதும் இன்று முதல் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானோர் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.