மக்களுக்கு ஏமாற்றம்..! தொட்டாபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!

கடந்த சில நாட்களாக உணவு மற்றும் குடி நீருக்காக குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளுக்கு காட்டு யானைகள் படையெடுத்து வருகின்றன.
இதனிடையே, நேற்று இரவு உதகையின் முக்கிய சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா செல்லும் சாலையில் ஒற்றை யானை உலாவுவதாக வந்த தகவலையடுத்து, அங்கு வந்த 10-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் யானையை துரத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் அருகில் இருந்த தனியார் சுற்றுலாத்தலத்திற்குள் சென்ற யானை, அங்கிருந்து சோலைப் பகுதிக்குள் சென்றது.
வனத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாலும், காட்டு யானை மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தால் தாமாகவே வனப் பகுதிக்குள் செல்ல அதிக வாய்ப்பு உள்ளதால், வனத் துறையினர் முக்கிய சுற்றுலா தலங்கள் செல்லும் சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தொட்டபெட்டா காட்சிமுனைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோடை வெயில் காரணமாக கடும் வறட்சி நிலவுவதால், வனப் பகுதிகளில் தண்ணீர் மற்றும் உணவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து யானைகள் தற்போது அதிக அளவில் தண்ணீர் தேடி ஊருக்குள் உலாவி வருவதை பார்க்க முடிகிறது.
தகவலறிந்த வனத் துறையினர், அங்கு வந்து சைரன் ஒலி எழுப்பி, யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ந்து, மலைப்பாதையில் யானைகளை கண்டால், வாகனங்களை அப்படியே நிறுத்திவிட வேண்டும் எனவும், யானை அங்கிருந்து செல்லும் வரை காத்திருந்து, அதன் பின்னரே செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், யானையை விரட்டவோ, கூச்சலிடவோ கூடாது என வனத் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.