பயணிகள் பீதி..! தரையிறங்க 50 நிமிடங்கள் இருந்த வேளையில் விமானத்தின் கழிவறையில் இருந்து புகை..!
டெல்லியில் இருந்து புதன்கிழமை (ஜூன் 26) மாலை மும்பை நோக்கி இண்டிகோ விமானம் சென்றுகொண்டு இருந்தது. அப்போது அந்த விமானத்தில் 176 பயணிகள் இருந்தனர்.
நடுவானில் விமானம் பறந்தகொண்டு இருந்தபோது விமானத்தின் கழிவறையிலிருந்து புகை வருவதை புகை உணர்கருவிகள் (ஸ்மோக் சென்சார்கள்) கண்டறிந்து எச்சரிக்கை ஒலி எழுப்பின.
விமானப் பணியாளர்கள் கதவைத் தட்டியதையடுத்து, கழிவறையிலிருந்து வெளியே வந்த ஆடவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கலீல் காஜம்முல் கான் என்றும் அவரது வயது 38 என்றும் அப்போது அடையாளம் காணப்பட்டது.
கழிவறையில் புகைப்பிடித்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
விமானம் மும்பை வந்தடைந்ததும் விமானக் கழிவறையில் விதிகளை மீறி புகைப்பிடித்த பயணியான கலீல் கான் குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
அவர் மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க 50 நிமிடங்கள் இருந்தவேளையில் புகைப்பிடித்த சம்பவம் நிகழ்ந்தது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.