பயணிகள் மகிழ்ச்சி..! இலங்கைக்கு படகு சேவை கட்டணம் குறைப்பு!

சிவகங்கை என்ற படகு மூலம் ஆகஸ்ட் 2024 முதல் நாகப்பட்டினம் மற்றும் கங்கேசன்துறை இடையே சுபம் குழும படகு சேவையை வழங்கி வருகிறது. மண்ணார், நயினாதீவு, திரிகோனமலை-அனுராதபுரம் மற்றும் ராமாயண பாதை போன்ற இடங்களுக்கு செல்ல சிறப்பு டூர் பேக்கேஜுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காங்கேசன் துறைமுகத்துக்கு (இலங்கை) இயங்கும் சர்வதேச பயணிகள் படகு சேவையின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. கட்டணம் ரூ.8,500 இருந்து ரூ.8,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இலவசமாக எடுத்துச் செல்லும் லக்கேஜ் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுபம் குழுமம் என்ற நிறுவனம் இந்த படகு சேவையை இயக்குகிறது. பயணிகளின் வசதிக்காக கட்டண குறைப்பு மற்றும் லக்கேஜ் அளவு அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. சுபம் குழும நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி இது குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "பயணிகளின் வசதிக்காக நாகப்பட்டினம் மற்றும் கங்கேசன்துறை இடையேயான பயண கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு புதன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் அதிக பயணிகள் இந்த சேவையை பயன்படுத்துவார்கள்" என்று அவர் கூறினார்.
அந்நிறுவனத்தின் இயக்குனர் சுபாஸ்ரீ சுந்தரராஜ் பேசுகையில், "இலவச லக்கேஜ் அளவு 10 கிலோவில் இருந்து 22 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பணம் செலுத்தி எடுத்துச் செல்லும் லக்கேஜ் 60 கிலோவில் இருந்து 50 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது. பயணிகள் 15 கிலோ செக்டு லக்கேஜ் மற்றும் 7 கிலோ கையில் உள்ள லக்கேஜ் இலவசமாக எடுத்துச் செல்லலாம்" என்றார்.