1. Home
  2. தமிழ்நாடு

பாராளுமன்றத்தில் 23 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்..!

1

மணிப்பூர் விவகாரத்தால் அமளியோடு நடைபெற்று வந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவுபெற்றது. கடந்த ஜூலை 20 ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன.

பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்ட தொடரில் மணிப்பூர் கலவர பிரச்சினை முக்கிய அம்சமாக எதிரொலித்தது. கூட்டம் தொடங்கிய நாள் முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தது வரை எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற 2 அவைகளையுமே ஸ்தம்பிக்க செய்தன.

எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானம் மீதான விவாதம் கடந்த 8-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருத்துக்கள் தெரிவித்து பேசிய நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பதில் அளித்தார். சுமார் இரண்டரை மணிநேரம் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசியதும், தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததும் இந்த கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாகும்.

நேற்று 17-வது நாளாக பாராளுமன்ற இரு அவைகளும் கூடின. நேற்றும் மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அமளிக்கு மத்தியில் இந்திய தண்டனை சட்டம் தொடர்பான 3 முக்கிய சட்ட திருத்த மசோதாக்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். அதன்பின்னர், மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த அமளிக்கு இடையே டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா,  டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதா, தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்க குழு அமைக்கும் மசோதா, பட்டியல் பழங்குடிகள் குறித்த அரசியல் சாசன திருத்தம் செய்வதற்கான மசோதா, ஹிமாச்சல் பழங்குடியினர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான மசோதா, உயிரியல் பன்மிய திருத்த மசோதா, கூட்டுறவு சங்கங்களின் திருத்த மசோதா,  வனபாதுகாப்பு திருத்த மசோதா, தேசிய தாதி மற்றும் செவிலித்தாய் ஆணைய மசோதா, தேசிய பல்மருத்துவ ஆணைய மசோதா, ஜின் விஸ்வாஸ் துணை அம்சங்கள் திருத்த மசோதா, காலாவதியான சட்டங்களை ரத்து செய்யும் மசோதா உட்பட 23 முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது.

17 அமர்வுகளாக நடைபெற்று வந்த இந்த கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாக, மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காரசாரமான விவாதம் நடைபெற்றது. மூன்றாவது நாளாக நடந்த விவாதத்தின் இறுதியில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் உரையாற்றினார். பிறகு, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

Trending News

Latest News

You May Like