’நோ ஆல் பாஸ்’ தொடர்பாக கையெழுத்து கேட்டால் பெற்றோர் எதிர்த்து கேளுங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ்!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் பெயில் என்ற நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது. அதாவது கட்டாய தேர்ச்சி முறையை மாற்றிவிட்டனர். இந்த விஷயத்தில் பெற்றோர்களிடம் இருந்து முன்கூட்டியே ஒப்புதல் கடிதம் பெறப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொடக்கக் கல்வியில் இடைநிற்றலே இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த சூழலில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 5ஆம் வகுப்பில் போதிய மதிப்பெண்கள் பெறவில்லை எனில் பெயில் என்று அறித்தால் அந்த பெற்றோர்கள் எத்தகைய அழுத்தத்திற்கு ஆளாவர் என யோசித்து பார்க்க வேண்டும்.
5 வயது பிள்ளைக்கு என்னென்னு அட்வைஸ் பண்ணுவீங்க? அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை சட்டத்தின் படி, ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் தான் உயர் கல்வியை வெற்றிகரமாக தாண்டி செல்கின்றனர். பெயில் அன்று அறிவித்து நெருக்கடி கொடுத்தால் அவர்கள் கல்வி சிஸ்டத்தில் இருந்தே வெளியேறி சென்று விடுவார்கள்.
எனவே தமிழக மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு குரலையாவது வெளிப்படுத்துங்கள். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் தேர்வில் தோல்வி என கையெழுத்து போடச் சொன்னால் எதிலும் கையெழுத்து போடாமல் எதிர்த்து கேள்வி கேளுங்கள்.
என் பிள்ளை ஒரு வருடம் பெயிலாகி அதே வகுப்பில் உட்கார்ந்து விட்டால், அதன் எதிர்காலம் என்னவாகும் என்று கேள்வி கேளுங்கள். அப்படி செய்தால் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் அமையும். கட்சிக்காக கேட்கவில்லை. கல்வி சிஸ்டத்திற்காக கேட்கிறோம். பதற்றத்துடன் காலையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்தார்.
எனவே நாட்டின் நிலைமை அப்படியிருக்கிறது. ஒவ்வொரு குடிமகனையும் அறிவு சார்ந்து சிந்திக்க வைக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் என்ன தேவை என்பதை அந்தந்த மாநிலம் தான் அறியும். இதில் பெரியண்ணன் மனப்பான்மையில் நாங்கள் கூறுவதை தான் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு செயல்படக் கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.