பலே கில்லாடி.. ரூ.13 ஆயிரம் கோடியை சுருட்டிவிட்டு தற்கொலை நாடகம் போடும் நிரவ் மோடி.. நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல் !!
இந்தியாவில் பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் என கருதப்பட்ட பலரும் வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டனர். அவர்கள் எந்த நாட்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் இந்தியாவுக்கு கொண்டுவரமுடியாத நிலை உள்ளது.
அவர்கள் தங்கியிருக்கும் நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் மூலம் தப்பித்து வருகின்றனர். அந்த வகையில் நீண்ட காலமாக கம்பி நீட்டிக்கொண்டிருப்பவர் நிரவ் மோடி.
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார். இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று அங்கு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாம் கூசி உத்தரவிட்டார். அதனை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் நிரவ்மோடி தரப்பு மனுதாக்கல் செய்தது.
அந்த மனு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் லண்டனிலேயே இருக்கிறார். இதனிடையே லண்டன் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிரவ் மோடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிரவ்மோடி மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் மும்பை சிறையில் அடைக்கப்பட்டால் அங்கு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் மனநல நிபுணர் சான்றிதழ் கொடுத்திருப்பதாகக் கூறினார்.
அவரை அடைக்க திட்டமிட்டுள்ள மும்பை சிறையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், அவரை நாடு கடத்தக் கூடாது என்றும் தெரிவித்தார். இதனால் இந்த வழக்கில் விசாரணை சற்று தொய்வடைந்துள்ளது. அடுத்தக்கட்ட விசாரணையின்போது நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in