1. Home
  2. தமிழ்நாடு

பாலமேடு ஜல்லிக்கட்டு நாயகன்..!

Q

பொங்கல் திருவிழாவின் முக்கிய அம்சமாக மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் நேற்று (ஜன.14) ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மாட்டு பொங்கல் தினமான இன்று (ஜன.15) புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது.அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்பதிவு செய்யப்பட்ட காளைகள் மற்றும் வீரர்களுக்கு என மொத்தம் 120 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். காளையின் உடல்நிலை, பதிவு எண், கொம்பின் அளவு உள்ளிட்ட அம்சங்கள் சரிபார்க்கப்பட்டன.

பரிசோதனையின் போது அப்பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போலீசாருக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட, அவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

அதன் பின்னர், உறுதி மொழி ஏற்கப்பட்டு, மகாலிங்கசாமி மடத்துகாளை கோவில் காளையாக அவிழ்த்து விடப்பட்டது. பிறக்கு வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. துள்ளி திரிந்த காளைகளுக்காக காத்திருந்த காளையர்கள் அதை அடக்கி தீரத்தை வெளிப்படுத்தினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களின் கைகளில் அகப்படாமல் துள்ளி திமிறின.

கடைசி சுற்றுக்கு முந்தைய சுற்று நிலவரப்படி, 14 காளை அடக்கிய பார்த்திபன் முதலிடத்தில் உள்ளார். 12 காளை அடக்கிய துளசி இரண்டாமிடம், 11 காளை அடக்கிய பிரபா மூன்றாம் இடத்தில் உள்ளனர். போட்டியில் இதுவரை 53 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இன்றைய ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் டிராக்டர் பரிசாக அளிக்கப்பபட உள்ளது. முதல் பரிசு பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் உதயநிதி சார்பில் சொகுசு கார் பரிசளிக்கப்படுகிறது.

2வது பரிசு பெறும் காளைக்கு கன்றுடன் கூடிய நாட்டுப்பசுவும், மாடுபிடி வீரருக்கு பைக்கும் பரிசாக அளிக்கப்படுகிறது. இதுதவிர, அண்டா, சைக்கிள், தங்க நாணயம், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களும் பரிசாக தரப்படுகின்றன.

Trending News

Latest News

You May Like