ஐஎம்எப்பிடம் நிதி கேட்ட பாகிஸ்தான்! இந்தியா நிலைப்பாடு என்ன ?

பாகிஸ்தான் நீண்டகாலமாக சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கிய நாடாக இருந்து வருகிறது. மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களை செயல்படுத்துவதிலும், கடைப்பிடிப்பதிலும் மிகவும் மோசமான பதிவுகளைக் கொண்டுள்ளது.பாகிஸ்தான் 28 ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்களைப் பெற்றுள்ளது. 2019 முதல் கடந்த 5 ஆண்டுகளில், 4 சர்வதேச நாணய நிதியத் திட்டங்கள் உள்ளன.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தொடர்ந்து நிதியுதவி அளிப்பது உலக சமூகத்திற்கு ஆபத்தான செய்தியை அனுப்புகிறது. நிதி நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களின் நற்பெயருக்கு ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. மேலும் உலகளாவிய மதிப்புகளை கேலி செய்கிறது என்று இந்தியா சுட்டிக்காட்டியது.
பாகிஸ்தானுக்கு 1. 3 பில்லியன் டாலர்( ஒரு பில்லியன் என்பது ரூ.100 கோடி) கடன் வழங்க ஐஎம்எப் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. இந்த கடன் பாகிஸ்தான் பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கு ஆதரவாக வழங்கப்பட இருந்தது. இந்த கடனை வழங்குவுது குறித்து ஐஎம்எப் அமைப்பு இன்று ஆய்வு செய்ய இருந்தது..
ஆனால், சர்வதேச அமைப்புகளிடம் இருந்து பெறும் நிதியை ஜெய்ஷ் இ முகம்மது, லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு தான் பாகிஸ்தான் செலவு செய்கிறது என்பது இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நன்கு யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியிருந்தார். அந்த சர்வதேச நிதியத்தை அணுகப் போவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நடந்த ஐஎம்எப் அமைப்பில் நடந்த ஓட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது. சர்வதேச நிதியத்திடம் இருந்து நீண்ட காலம் கடன் வாங்கும் பாகிஸ்தான், அதன் திட்டங்களை கடைபிடிப்பதிலும், நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்துவது இல்லை என இந்தியா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பொருளாதார நடவடிக்கைகளில் ராணுவத்தின் ஆதிக்கம் உள்ளது. மக்களால்தேர்வு செய்யப்பட்ட அரசு இருந்தும் ராணுவம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் எதிர்ப்பு மற்றும் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்று ஐஎம்எப் தெரிவித்துள்ளது.