1. Home
  2. தமிழ்நாடு

15 நகரங்களை தாக்கும் பாகிஸ்தான் முயற்சி முறியடிப்பு..!

1

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், ஒன்பது இடங்களில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள், தலைமையகங்களை குறி வைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த கட்டடங்கள் தரைமட்டமாகின; 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
 

இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், பாகிஸ்தான் தாக்கும் என, நம் படைகள் தயார் நிலையில் இருந்தன. எதிர்பார்த்தது போலவே, நேற்று முன்தினம் நள்ளிரவில், 15 இந்திய நகரங்களை குறி வைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவியது. அவை வழியிலேயே தடுத்து தகர்க்கப்பட்டன.
 

அதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் ராணுவ தளங்களை குறி வைத்து, நம் படைகள் நேற்று அதிகாலையில் தாக்குதல் நடத்தின.
 

அதில், லாகூரில் உள்ள வான்வழி பாதுகாப்பு கவசம் தகர்க்கப்பட்டது. நீண்ட நேரமாக விட்டு விட்டு கேட்ட குண்டு வெடிப்பு சத்தமும், இருட்டில் ஜொலித்த தீப்பிழம்பும் லாகூர் நகரில் பீதியை கிளப்பியது.
 

ஏறத்தாழ ஒன்றரை கோடி மக்கள் வாழும் இரண்டாவது பெரிய பாகிஸ்தானிய நகரம் அது. அங்குள்ள கிரிக்கெட் ஸ்டேடியமும் குண்டு வெடிப்பால் சேதமானது.

இதற்கிடையே, இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையிலும் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இதில், மூன்று பெண்கள், ஐந்து குழந்தைகள் உட்பட, 16 பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நம் படைகள், பீரங்கி தாக்குதல் நடத்தின.
 

முன்னதாக, பாகிஸ்தானின் முயற்சிகள் குறித்து, மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. 'அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்புர், பதிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தர்லாய், புஜ் ஆகிய நமது நகரங்களை நோக்கி, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வாயிலாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. அதை ஒருங்கிணைந்த, 'யு.ஏ.எஸ்., கிரிட்' எனப்படும் ஆளில்லாத வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்பு வாயிலாக எதிர்கொண்டு நடுவானில் தடுத்து அழித்தோம். அந்த தாக்குதலுக்கு இணையாக, அதே பாணியில் நம் படைகளும், பாகிஸ்தானின் ராணுவ மையங்கள், வான்வழி பாதுகாப்பு கவச முறைகளை குறி வைத்து பதிலடி கொடுத்தன. இதில், லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான்வழி பாதுகாப்பு கவச கட்டமைப்பு தகர்க்கப்பட்டது' என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like