1. Home
  2. தமிழ்நாடு

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷன் விருதை வைத்து அஞ்சலி!

1

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை அவரது மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டார். விஜயகாந்த் மறைந்த நிலையில் மத்திய அரசு தந்த பத்ம பூஷன் விருதை அவருக்கு சமர்ப்பிக்கும் வகையில் பிரேமலதா விஜயகாந்த் மேல்நோக்கி பார்த்தார். இந்த விழாவில் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் பிரேமலதா விஜயகாந்தின் தம்பி சுதீஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்று இருந்தனர்.

இந்நிலையில், விஜயகாந்த்துக்கான பத்ம பூஷன் விருதுடன் இன்று சென்னை வந்தடைந்தார் பிரேமலதா விஜயகாந்த். சென்னை விமான நிலையத்தில் ஏராளமான தேமுதிக தொண்டர்கள் கூடி, பத்ம பூஷன் விருதுடன் வந்த பிரேமலதாவை வரவேற்றனர். இதைத்தொடர்ந்து, தொண்டர்கள் புடைசூழ கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு பேரணியாக சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டார் பிரேமலதா விஜயகாந்த். திறந்தவெளி வாகனத்தில் பிரேமலதா, பத்மபூஷன் விருதைக் காட்டியபடி புறப்பட்டார். அவரைத் தொடர்ந்து தேமுதிகவினர் தங்கள் வாகனங்களில் பேரணியாகச் செல்லக் கிளம்பினர். அனுமதியின்றி சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரேமலதாவுடன் பேரணியாக செல்ல முயன்ற தேமுதிகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஒன்றிரண்டு வாகனங்களை மட்டுமே அனுமதிக்க முடியும் எனத் தெரிவித்தனர். இதனால் தேமுதிக தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாகனங்கள் வரிசையாக நின்றதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த், பத்ம பூஷன் விருதுடன் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகம் வந்தடைந்தார். அங்கு தேமுதிக தொண்டர்கள் கூடி பிரேமலதாவுக்கு ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றனர். அதைத்தொடர்ந்து, அங்குள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷன் விருதை வைத்து மரியாதை செலுத்தினார் பிரேமலதா. விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷன் விருதை வைத்து கண் கலங்கினார் பிரேமலதா. விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரனும் கண்ணீர் விட்டு அழுதார். இளைய மகன் சண்முக பாண்டியன் கண் கலங்கினார். தொடர்ந்து, தொண்டர்களுடன் இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் பூஜை செய்து வழிபட்டார் பிரேமலதா.

தொடர்ந்து, “விஜயகாந்திற்கு உயரிய விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. தமிழர்கள் அனைவருக்கும் நான் பத்ம பூஷண் விருதை சமர்ப்பிக்கிறேன். விஜயகாந்திற்கு பாராட்டு விழா நடத்திய டெல்லி தமிழ்ச் சங்கத்திற்கும் நன்றி! விண்ணுலகில் இருந்து விஜயகாந்த் ஆசிர்வதிப்பார்” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like