1. Home
  2. தமிழ்நாடு

எங்கள் போராட்டம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை தொடரும்: எடப்பாடி பழனிச்சாமி..!

1

அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் நீதி கேட்டும், அதிமுகவினர் கைதைக் கண்டித்தும் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

அண்ணா பல்கலை வளாக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறுமிகள், கல்லூரி மாணவிகள், பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியுள்ள ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் நிலையில், ஆர்ப்பாட்டத்தில் சென்று கலந்து கொண்ட கழகத்தினரை காவல்துறையினர் கைது செய்து அராஜக அடக்கமுறையில் ஈடுபட்டு வருகின்றனர், மக்கள் குரலின் பிரதிபலிப்பான எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயலும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கில் திமுகவை சேர்ந்தவர், போதைப்பொருள் மாபியா வழக்கில் திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர், என நீளும் திமுக நிர்வாகிகளின் குற்றப்பின்னணியாலும், ஞானசேகரன் குறித்து வெளிவரும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களாலும், திமுக அரசு இந்த வழக்கிலும் ஏதேனும் அரசியல் தலையீடு ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது. அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்! இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார்? என அதிமுகவினர் ஆங்காங்கே போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரன் செல்போனில் பேசியபோது சார் (sir) என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். ஆனால் போலீஸார் அது திசை திருப்புவதற்காக சும்மா பயன்படுத்தியுள்ளார் என தெரிவித்துள்ளனர் என்பது அதிமுகவின் குற்றச்சாட்டு. இதை சுட்டிக்காட்டியே அதிமுக தலைவர்கள் யார் அந்த சார்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like