ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோர்ட் அபராதம்..ரூ.2 கோடி செலுத்த உத்தரவு..!

பத்மஸ்ரீ விருது பெற்றவர் பாரம்பரிய பாடகர் பயாஸ் வாசிபுதின் தாகர். இவர் தமது தந்தை நசீர் பயாசுதின் தாகர் மற்றும் மாமா ஜாஹிருதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட சிவ ஸ்துதி பாடலில் இருந்து பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்தில் இடம்பெற்ற வீர ராஜ வீர என்ற பாடல் நகல் எடுக்கப்பட்டதாக வழக்கு தொடர்ந்தார்.
டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த அவர், ஏ.ஆர். ரஹ்மான், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தை பிரதிவாதிகளாக சேர்த்திருந்தார். இவர்கள் இந்த பாடலை பயன்படுத்துவதை தடுக்க தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும், இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி இருந்தார்.
மேலும் பாடல் வெவ்வேறு வரிகளை கொண்டு இருந்தாலும் அதன் தாளம், இசை அமைப்பு சிவ ஸ்துதியை போலவே இருப்பதாக மனுதரார் தாகர் குற்றம்சாட்டி இருந்தார். ஆனால் ஏ.ஆர். ரஹ்மான் தரப்பு இதற்கு மறுத்து தெரிவித்தது.
சிவஸ்துதி என்பது ஒரு பாரம்பரிய இசையமைப்பு, இது பொது தளத்தின் ஒரு பகுதி, 227 தனித்துவமான அடுக்குகளை கொண்ட மேற்கத்திய இசையை பயன்படுத்தி இயற்றப்பட்ட அசல் படைப்பு என்று ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் வாதிடப்பட்டது.
இந் நிலையில், தாகரின் வழக்கில் இன்று (ஏப்.25) நீதிபதி பிரதிபா எம். சிங் தீர்ப்பளித்தார். அதில் சிவஸ்துதி பாடலின் இசையமைப்பை வீர ராஜ வீர பாடல் அடிப்படையாக கொண்டது.
அது மட்டும் அல்லாமல் சில மாற்றங்களுடன் ஒத்துப்போகிறது என்ற அவர், ரஹ்மான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ரூ.2 கோடியை அபராதமாக டில்லி ஐகோர்ட் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்று இடைக்கால உத்தரவிட்டார்.