அரசு ஊழியர்களுக்கு உத்தரவு.. கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்தல் !

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு பத்தாயிரத்தை தாண்டிய நிலையில், தமிழகத்திலும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. அதாவது, தமிழகத்தில் கொரோனா 3ஆவது அலை வீசுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை அரசு அலுவலர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் கோட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்கு விருத்தாசலம், திட்டக்குடி. வேப்பூர், தாலுகாவில் பணிபுரியும் வருவாய் வட்டாட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை மருத்துவ அலுவலர்கள் மற்றும் நகராட்சி பேரூராட்சி அலுவலர்கள் அனைவரையும் அழைத்து கலந்தாய்வு செய்தனர்.
இந்த கூட்டத்தின் வாயிலாக வருவாய் கோட்டாட்சியர் வந்திருந்த அரசு அலுவலர்களிடம் பொதுமக்கள் அனைவரும் முகம் கவசம் அணிய வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். மேலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று காவல் துறையினர் வலியுறுத்த வேண்டும். தேவையில்லாமல் கூட்டங்கள் கூடுவதை தடுக்க வேண்டும் என்றும் அறிவுரைகளை வழங்கினார்.
இதில் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் அரங்கநாதன், உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின், விருத்தாசலம் வட்டாட்சியர் சிவகுமார், வேப்பூர் வட்டாட்சியர் செல்வமணி, விருத்தாசலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் எழில், மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தரன், கம்மாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் புலிகேசி உள்ளிட்ட அனைத்து துறை அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
newstm.in