1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் ஒரு உயிரை காவு வாங்கிய ஆன்லைன் ரம்மி..! கல்லூரி பேராசிரியர் தற்கொலை!

1

அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் தினகரன் (42). திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு இந்துமதி என்ற மனைவியும், 6 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், தினகரனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்ததாகவும், இதுவரை ரூ.20 லட்சம் பணத்தை அதில் இழந்ததாகவும் தெரிகிறது. அந்த கடனை அடைக்க வீட்டுக்கடன் மற்றும் நகைக்கடன் வாங்கியுள்ளார்.

அப்போதும் திருந்தாமல், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாடியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, அந்த பணம் போதவில்லை என ஆன்லைன் கடன் செயலிகளிலும் கடன் வாங்கியுள்ளார். பின்னர், அந்த கடனை திருப்பி அடைக்க முடியாமல், மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதனைக் கண்ட கல்லூரி நிர்வாகம், கடன் பிரச்னையை தீர்த்து விட்டு கல்லூரிக்கு வருமாறு, அவரை தற்காலிகமாக பணியிலிருந்து நிறுத்தியுள்ளது. ஏற்கனவே கடன் பிரச்னையால் தவித்த வந்த தினகரனுக்கு, கல்லூரியின் இந்த நடவடிக்கை மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால், சித்தேரி பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் இன்று தற்கொலை செய்து கொண்டார்.

அதனைக் கண்ட ரயில் என்ஜின் ஓட்டுநர், தண்டவாளத்தில் ஒருவர் தற்கொலை செய்து இறந்து விட்டதாக சித்தேரி ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் ஆர்பிஎப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த ரயில்வே போலீசார், உயிரிழந்த தினகரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நடத்திய விசாரணையில் அவர் கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

Trending News

Latest News

You May Like