நாளை முதல் ரூ.45க்கு வெங்காயம்! முதல்வர் உத்தரவு!

தமிழகத்திற்கு, வெளிமாநிலத்தில் இருந்து வரக்கூடிய வெங்காயத்தின் வரத்து தற்போது பெருமளவில் குறைந்துள்ளதால் கடந்த ஒரு வார காலமாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
குறிப்பாக, கா்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வெங்காயம் தமிழகம் வருவது வழக்கம். அங்கும் மழை காரணமாக வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளதால் வெங்காய வரத்து மிகவும் குறைந்துவிட்டது. இதனால் கடந்த சில நாட்களாக பெரிய வெங்காயத்தின் விலை படிப்படியாக அதிகரித்து வந்தது.
இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி சில்லறை விற்பனையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு நாளை முதல் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கூட்டுறவு பசுமைப் பண்ணை காய்கறி கடைகள் மூலம் நாளை முதல் விற்பனை துவங்க உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் நாளையும், தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் விற்பனை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.