வரும் 20-ம் தேதி தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம்..!

சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, நீட் விலக்கு மசோதாவில் எந்த காலத்திலும் நான் கையெழுத்து போட மாட்டேன். நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கி விடும். நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று கூறியிருந்தார். கவர்னரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து தி.மு.க. சார்பில் வரும் 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வரும் 20-ம் தேதி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நீட் தேர்வு, தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவை சிதைத்து, அவர்களை மட்டுமன்றி அவர்தம் பெற்றோரையும் மரணத்தை நோக்கி தள்ளுகிறது. எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும் எனக்கென்ன என்றிருக்கும் மத்திய அரசையும் - கவர்னரையும் கண்டித்து, முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் வரும் 20-ம் தேதி அன்று மாபெரும் உண்ணாவிரத அறப்போரை நடத்தவுள்ளோம்.
தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும், நம் மாணவர்கள், பெற்றோர்களின் உயிரை காக்கவும் இந்த உண்ணாவிரத அறப்போரில் திரளாக பங்கேற்போம். நீட்டை ஒழிப்போம் என அந்த அறிவிப்பில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.