அடக்கொடுமையே..! காலில் எலும்பு முறிவு.. அட்டையில் கட்டுப் போட்ட மருத்துவர்கள்..!
பீகாரை சேர்ந்தவர் நிதிஷ்குமார்.இவர் பைக்கில் இருந்து தவறி விழுந்ததில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இளைஞர் மீனாப்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கு முறையான சிகிச்சை வழங்காமல், உடைந்த காலுக்கு அட்டையை வைத்து கட்டு போட்டு சிகிச்சை அளித்துள்ளனர். அதாவது எலும்பு முறிவுக்கு கட்டுப் போடுவது வழக்கம். ஆனால் இங்கு அட்டைப் பெட்டியைக் கிழித்து, அதன்மூலம் எடுத்த உபரி அட்டைகளை வைத்து கட்டுப் போடப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்தப் படம்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐந்து நாட்களில் எந்த மருத்துவரும் அவரைப் பார்க்கவில்லை என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவாகாரத்திற்குப் பிறகு தற்போது நிதிஷ்குமார், முசாபர்பூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விபாகுமாரி, “பாதிக்கப்பட்ட நபருக்கு விரைவில் சிகிச்சை அளிக்கப்படும். அவரை பரிசோதிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஏன் அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்பது குறித்தும், அட்டைப்பெட்டியைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பது குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.