அரைஞாண் கொடி அணிந்திருந்ததால் நீட் தேர்வு எழுத அனுமதி மறுத்த அதிகாரிகள்..!

2025- 2026 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வு நேற்று மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடைபெற்றது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 7 ல் தொடங்கி மார்ச் 7 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை எழுத நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர்.
இந்நிலையில் திருவண்ணாமலை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் வெள்ளி அரைஞாண் கொடி அணிந்திருந்தார். அங்கிருந்த அதிகாரிகள் அந்த மாணவரை பரிசோதித்துவிட்டு, அவரை தேர்வு அறைக்குள் அனுமதிக்க மறுத்து உள்ளனர்.
அந்த மாணவர் எவ்வளவோ கூறியும் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அந்த மாணவர் வெளியே வந்த நிலையில், அந்த மாணவனின் தந்தை, மாணவரின் இடுப்பில் இருந்த அரைஞாண் கொடியை அறுத்து அகற்றினார். அதன்பிறகு அவர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டார். நீட் தேர்வுக்காக மாணவர்கள் வருடக் கணக்கில் படித்து தயாராகி தேர்வுக்கு வந்துள்ள நிலையில், இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவது அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. மற்ற தேர்வுகளைப் போல அல்லாமல், ஆண்டுதோறும் நீட் தேர்வின்போது மாணவ மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவதாக பெற்றோர்கள், பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.