அடங்காத குருவிகள்... துரத்தும் அதிகாரிகள்! விமான நிலையத்தில் தினசரி கூத்து!
துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த ரூ. 16 லட்சம் மதிப்புடைய 315 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து சிறப்பு விமானங்கள் வந்தன. இந்த விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்திக் கொண்டு வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில், துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த மஸ்தாப் கனி (49) என்பவரை சுற்றி வளைத்த அதிகாரிகள், அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் கிடைக்கவில்லை.
பின்னர் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் ரூ.16 லட்சத்தி 70 ஆயிரம் மதிப்புள்ள 315 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடந்த சில மாதங்களாக கொரோனா பரவலை அடுத்து சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், மீண்டும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனை பயன்படுத்தி, கூலிக்கு தங்கத்தை கடத்தும் குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் புதிய திட்டத்துடன் செயல்படால் மட்டுமே முடியும். இல்லையெனில், இந்த சம்பவம் தொடரவே செய்யும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.