1. Home
  2. தமிழ்நாடு

நவம்பர் மாதம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - அதிகாரபூர்வ அறிவிப்பு

நவம்பர் மாதம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - அதிகாரபூர்வ அறிவிப்பு


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அடுத்த மாதம் நவம்பர் 22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகித்து வந்த விஷால் தலைமையிலான அணியினரின் பதவிக்காலம் கடந்த 2019 ஏப்ரல் 30 உடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளர் சேகரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த நியமனத்தை எதிர்த்து தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்த நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரனை சிறப்பு அதிகாரியாக நியமித்து, கடந்த ஜூன் 30 ஆம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது. கொரோனா நோய்த் தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு காலக்கெடுவை செப்டம்பர் 30ஆம் தேதி வரை உயர்நீதிமன்றம் ஏற்கனவே நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.

திட்டமிட்டபடி தேர்தல் நடத்தி முடிக்கப்படாததால், மீண்டும் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான கால அவகாசம் வழங்கக் கோரி ராதாகிருஷ்ணன் சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி பி.டி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, ராதாகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டிசம்பர் 31-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமெனவும், சிறப்பு அதிகாரியான ஒய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தேர்தலை நடத்தி முடித்தது குறித்த அறிக்கையை ஜனவரி 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நவம்பர் 22-ம் தேதி நடைபெறும் என உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி எம். ஜெயசந்திரன் அறிவித்துள்ளார். சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நவம்பர் 22 அன்று காலை 8 மணி முதல் 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2020-22ம் ஆண்டு தேர்தலுக்கான இறுதிசெய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் அக்டோபர் 12-ம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 15 காலை 11 மணி முதல் அக்டோபர் 23 மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கலுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும் அக்டோபர் 16 முதல் 23 ஆம் தேதி மாலைக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சங்க அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சேர்க்க வேண்டும் என்றும் அக்டோபர் 24 முதல் அக்டோபர் 29 மாலை 4 மணி வரை வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். அக்டோபர் 29 மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

newstm.in

Trending News

Latest News

You May Like