அதிகாரபூர்வ அறிவிப்பு..! ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் கமல்..!

தமிழகத்தில், ஜூலை 24ல் காலியாகும் ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, ஜூன் 19ல் தேர்தல் நடக்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று (மே 28) தி.மு.க., வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இது குறித்து தி.மு.க., தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2025ம் ஆண்டு ஜூன் 19ம் நடக்கும் ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.
தி.மு.க., வேட்பாளர்கள்!
* பி.வில்சன்
* சிவலிங்கம்
* ரொக்கையா மாலிக் (எ) சல்மா
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கமல் ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தி.மு.க., சார்பில் ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தவர்களில் வில்சனுக்கு மட்டுமே மீண்டும் பதவி வழங்கப்படுகிறது. தொ.மு.ச., நிர்வாகி சண்முகம், அப்துல்லா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
புதிய வேட்பாளர்கள் யார்
வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கவிஞர் சல்மா, திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்தவர். பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவராக பதவி வகித்தவர். 2006ல் தி.மு.க., சார்பில் மருங்காபுரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.
சிவலிங்கம், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளராக பணியாற்றி வருகிறார். இரண்டு முறை பனமரத்துப்பட்டி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ., ஆக தேர்வு செய்யப்பட்டவர்