கணவரை பிரிந்து தனியாக வசித்த நர்ஸ் பூஜையறையில் படுகொலை.. போலீஸ் விசாரணை..!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பாப்பம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (44). இவர் திண்டுக்கல்லில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (43). இவர், ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 17 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் தனது மனைவியை பிரிந்து திண்டுக்கல்லில் தனியாக வசித்து வருகிறார். அவருடன் குழந்தைகளும் வசித்து வருகின்றனர். ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரம் பகுதியில் செல்வி தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு சுரேஷ், மனைவி செல்வியை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நீண்ட நேரம் செல்போன் சுவிட்ச் ஆப் ஆன நிலையில் இருந்தது. இதையடுத்து அவரது உறவினர்களிடம் தெரிவித்து வீட்டிற்கு சென்று செல்வியை பார்த்து வருமாறு கூறியுள்ளார்.
வீடு பூட்டி இருந்த நிலையில் நீண்ட நேரத்திற்கு பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று அவர்கள் பார்த்தனர். அப்போது செல்வி வீட்டில் உள்ள பூஜை அறையில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் கொடூரமாக இறந்து கிடந்துள்ளார். உறவினர்கள் செல்வி இறப்பு குறித்து சுரேஷிடம் தெரிவிக்கவே அவர் அலறி துடித்து குழந்தைகளுடன் ஓடி வந்தார்.
இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
தடயவியல் நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. டி.எஸ்.பி. தங்க கிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? குடும்ப பிரச்சனையால் கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.