இனி தான் ஆட்டம் ஆரம்பம்..! இன்று தொடங்குது அக்னி நட்சத்திரம்..!

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தமிழகத்தில் இன்று தொடங்குகிறது. இது வரும் 28ஆம் தேதி வரை 24 நாட்களுக்கு நீடிக்கும். இதனால் கடந்த மாதத்தை விட இம்மாதம் வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்களுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்கனவே வெளியிட்டுள்ளன.
அதன்படி, வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும், வெறும் கால்களுடன் நடக்க வேண்டாம், மது, டீ, காபி, அதிக சர்க்கரை தன்மையுடைய பானங்களை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும், பயணத்தின் போது எப்போதும் தண்ணீர் பாட்டில் வைத்திருக்க வேண்டும், தர்பூசணி, மஸ்க் மெலன், ஆரஞ்சு, திராட்சை போன்ற நீர்சத்து அதிகமாக உள்ள பழங்களை சாப்பிடலாம், மெல்லிய பருத்தி ஆடைகளை உடுத்தலாம், வெயில் உடல் மீது நேரடியாக படுவதை தவிர்க்க குடை, தொப்பி, துண்டு ஆகியவற்றை பயன்படுத்தலாம், குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் வெயில் நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் என்பது என்ன?
பூமத்திய ரேகைக்கும், கடக ரேகைக்கும் இடையே சூரியன் பயணம் செய்யும் காலம் அக்னி நட்சத்திரம் என்றும், அக்னி நட்சத்திர காலத்தில் சந்திரன் மட்டுமல்ல பூமியும் சூரியனுக்கு அருகில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தின் நடுவில் உள்ள ஏழு நாள்கள் வெயில் மிக அதிகமாக இருக்கும்.
இந்து பஞ்சாங்க அடிப்படையில் அக்னி நட்சத்திரத்துக்கு ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிரவேசிக்கும் சூரியன் அதிலிருந்து கிருத்திகை நட்சத்திரம் வரையில் பயணிக்கும் காலமே அக்னி நட்சத்திர காலமாகக் கருதப்படுகிறது.
மக்களே கவனம் :
அதிக வெப்பம் நிலவும் கத்தரி வெயில் காலகட்டத்தில் மதிய நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். தேவையின்றி வெளியில் செல்லக்கூடாது. அதிக வெப்பநிலை வெப்பச் சோர்வு மற்றும் வெப்பப் பக்கவாதம் போன்ற வெப்பம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கலாம். இது உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம். வெப்பமான வானிலை அதிக வியர்வையை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் நீங்கள் போதுமான நீர் ஆகாரங்களை பருகவில்லை என்றால் நீரிழப்புக்கு வழிவகுக்கும். அதீத நீரிழப்பு உடல் செயல்பாட்டை பாதிக்கலாம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். எனவே கவனமாக இருந்து உடலைக் காத்துக்கொள்ள வேண்டும்.