17ம் தேதி அல்ல, 19ம் தேதி! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!
கொரோனா தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்தும் விதமாக கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக, 20 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்தது.
ஆனால், எதிர்பார்த்ததை விட கூடுதலாக, மொத்தம் 28.36 லட்சம் பேருக்கு அன்றைய தினத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த மெகா தடுப்பூசி முகாமிற்கு அனைவர் மத்தியிலும் பலத்த வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து, வரும் 17ம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சென்னையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், “நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் மனநிலையை அறியும் முயற்சியாக இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு எவ்வாறு ஆலோசனை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 17 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது. கூடுதல் தடுப்பூசிகள் இன்னும் வராததால் தமிழகம் முழுவதும் வரும் 17ல் நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் வரும் 19ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது” என்றார்.