1. Home
  2. தமிழ்நாடு

அடக்குமுறை மூலமாக யாரும் வென்றதாக வரலாறும் இல்லை : முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

1

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில், முதல்வர்  மு.க.ஸ்டாலினின் உரையை திருச்சி சிவா எம்.பி. வாசித்தார். அந்த உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

 

டெல்லி மாநிலத்தின் முதல்வர் கெஜ்ரிவால் கைதுக்கு எனது கடுமையான கண்டனத்தையும் தி.மு.க.வின் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ.க. அரசு தனது ஏவல் படைகளான சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத் துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறது. 

 

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரை கைது செய்திருப்பது தோல்வி பயத்தின் வெளிப்பாடு ஆகும். இந்தச் சூழலில் ஆம் ஆத்மி கட்சிக்கு, தி.மு.க. உறுதியாகத் துணை நிற்கிறது. கெஜ்ரிவால் கைது மூலம் இண்டியா  கூட்டணியை உடைக்க நினைத்த பிரதமர் மோடியின் எண்ணம் தோல்வியடைந்து விட்டது.

சர்வாதிகாரத்தை ஒரு போதும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவோம். பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த மக்கள் தயாராகி விட்டதை, தேர்தல் பிரசாரத்தின் போது காண முடிகிறது. அரைக்க அரைக்கச் சந்தனம் மணப்பதைப் போல, பா.ஜ.க.வின் தாக்குதல் அதிகமாக அதிகமாக கூட்டணியும், கூட்டணித் தலைவர்களும் வலிமை அடைகிறார்கள். இதைதான் அனைத்து மாநிலங்களிலும் பார்க்கிறோம். 

சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி பாஜக எங்களை மிரட்டுகிறது. இதில் மிரண்டு பா.ஜ.க.வில் ஐக்கியம் ஆகிறவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லை. பா.ஜ.க.வின் ஆணவத்துக்கு அடங்காதவர்களை கைது செய்கின்றனர்; இந்தியாவில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதைப் போல இருக்கிறது. 

அடக்கும்றை மூலமாக யாரும் வென்றதாக வரலாறும் இல்லை. ஆணவக்காரர்களின் ஆட்டத்தை மக்கள் அனுமதித்ததும் இல்லை.  இண்டியா கூட்டணியின் ஒற்றுமையால் மட்டுமே மோடியை வீழ்த்த முடியும் என்பதை மறந்து விட வேண்டாம். மக்களின் வாக்குகளாலே பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். 

இண்டியா  கூட்டணி கட்சிகள் உடனடியாக தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும், தொகுதிப் பங்கீடுகளை விரைந்து முடிக்க வேண்டும். அருமை நண்பர் கெஜ்ரிவால் விரைவில் வெளியில் வருவார். இண்டியா கூட்டணியை வலிமைப்படுத்தவும், இந்தியாவை செழுமைப்படுத்த வரும் அவர் விரைவில் வருவார். 

போராட்டக் களத்துக்கு வந்திருக்கும் அனைத்துத் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.  பரப்புரை பயணத்தில் இருப்பதால் என்னால் டெல்லி வர இயலவில்லை. நேரில் வர இயலாமைக்கு பொருத்தருளக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

Trending News

Latest News

You May Like