1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது - தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்..!

1

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர ஆர்.என்.ரவி இன்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையானது. அப்பதிவில், திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.

மேலும் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்ட படத்தையும் ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்திருந்தார். அத்துடன் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் காவி உடையுடன் உள்ள திருவள்ளுவர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். திருவள்ளுவர் படத்துக்கு பாஜகவினர் காவி உடை அணிவித்தது ஏற்கனவே சர்ச்சையானது. ஆனால் தற்போது ஆளுநர் ரவியும் காவி உடையுடனான திருவள்ளுவர் படத்தை பகிர்ந்து, அப்படத்துக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார். மேலும் திருவள்ளுவர சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி எனவும் புகழ்ந்துள்ளார். இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பெயரை குறிப்பிடாமல் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் "வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது" என தமது திருவள்ளுவர் நாள் வாழ்த்து செய்தியில் சாடியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ள திருவள்ளுவர் நாள் செய்தி: தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். 133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி! என பதிவிட்டுள்ளார் 


 

Trending News

Latest News

You May Like