இனி டிராபிக் பிரச்சனை இல்லை... பறக்கும் கார்களை அறிமுகப்படுத்தும் யுஏஇ!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொதுபோக்குவரத்துத்துறையில் தற்போது அதிக கவனத்தை பெற்று வருவது ஃபிளையிங் கார்கள்தான்.
'லிபர்ட்டி' என அழைக்கப்படும் இந்த கார்கள் இரண்டு இருக்கைகளை கொண்டுள்ளது. நெதர்லாந்தை மையமாக கொண்ட PAL-V என்ற வாகன உற்பத்தி நிறுவனம் இந்த இரண்டு இருக்கைகளை கொண்ட அதிநவீன பறக்கும் கார்களை தயாரித்து வருகிறது. இந்த பறக்கும் கார் திட்டத்தை இன்னும் 2 ஆண்டுகளுக்குள் அதாவது வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்த அமீரக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டம் நிறைவேறும் பட்சத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து பிற GCC நாடுகளுக்கு காரில் பறக்க முடியும் என கூறப்படுகிறது. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், இது சாலையில் ஒரு சாதாரண காரைப் போல ஓட்டி, பின்னர் மூன்று நிமிடங்களில் ஒரு சிறிய விமானத்தைப் போல பறக்க முடியும் என்பதுதான். இந்த தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தவுடன், GCC நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும்.
எடுத்துக்காட்டாக அபுதாபியிலிருந்து மஸ்கட்டிற்கு சுமார் 2 மணி நேரம் 20 நிமிடங்களில் சென்றடையலாம். இதேபோல் துபாயில் இருந்து பஹ்ரைனுக்கும் அதேநேரத்தில் செல்ல முடியும். இந்த பறக்கும் கார்கள் வழக்கமான விமான நிலையங்களை விட சிறிய இடத்திலிருந்து புறப்படவும் தரையிறங்கவும் முடியும். இந்த பறக்கும் கார்களுக்கு புறப்படுவதற்கு சுமார் 200 மீட்டர் ஓடுபாதையும், தரையிறங்குவதற்கு 30 மீட்டர் ஓடுபாதையும் இருந்தலே போது.
விமானங்களை போல் நீண்ட பெரிய ஓடுபாதைகள் தேவை இல்லை. இந்த பறக்கும் கார்களை சாலைகளில் பயன்படுத்த முடியும் என்பது மற்றொரு சிறப்பு. துபாயை தளமாகக் கொண்ட எவிடெரா நிறுவனம் ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட பறக்கும் கார்களுக்கான ஆர்டர்களை வழங்கியுள்ளது. இது முக்கியமாக விஐபி பயணம், அவசரகால தளவாடங்கள் மற்றும் உள்ளூர் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர காவல்படை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு போன்ற அரசு நிறுவனங்களும் இந்த பறக்கும் கார் திட்டங்களை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த பறக்கும் காரைப் பயன்படுத்த ஓட்டுநர் உரிமம் மற்றும் கைரோபிளேன் பைலட் உரிமம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லிபர்ட்டி பறக்கும் கார்களை இயக்குவதற்கான பயிற்சி விரைவில் அமீரகத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்து.
இந்த பறக்கும் காரின் விலை 800,000 டாலர்கள் ஆகும். அதாவது இந்திய ரூபாயில் 6, 83,09, 802 ஆகும். இந்தப் பறக்கும் கார் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் அதிகப்பட்சமாக 500 கிலோமீட்டர் வேகம் வரையிலும் பறக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த பறக்கும் காரில் 2 பேர் பயணிக்க முடியும், மேலும் 20 கிலோ எடையுள்ள சாமான்களை எடுத்துச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் கார்கள் அவசர காலங்களில் பெரிதும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.