இனி, சனிக்கிழமை விடுமுறை கிடையாது.. தமிழக அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில், இனி சனிக்கிழமையும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக சட்டசபையில் வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட அறிவிப்பு: “சென்னை மற்றும் மதுரையில் இரண்டு பதிவு மண்டலங்கள் உருவாக்கப்படும்.
சென்னை மண்டலத்தில் தாம்பரத்தை மையமாக வைத்து கூடுதலாக ஒரு புதிய மண்டலம் அமைக்கப்படும். பொது மக்கள் பத்திரப்பதிவு செய்ய ஏதுவாக தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்கள் இனி சனிக்கிழமையும் செயல்படும். சனிக்கிழமை மட்டும் 1,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.
பதிவு செய்த திருமண சான்றுகளை இணையம் வழியாக விண்ணப்பித்து திருத்தம் செய்யும் வசதி ரூ.50 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும். அவசர ஆவணப்பதிவிற்காக பதிவுத்துறையில் தட்கல் முறை அறிமுகம் செய்யப்படுகிறது.
தட்கல் முறையில் ரூ.5 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படும். முதல் கட்டமாக 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்” என்று அவர் கூறினார்.