இனி அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் - ஓபிஎஸ் தரப்பு
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/7580f40c074ffc71fb02bb06c2187da7.jpg?width=836&height=470&resizemode=4)
அதிமுக-விலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றை பயன்படுத்த ஒபிஎஸ் அணியினருக்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒ.பி.எஸ்-க்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஒ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீடு நவம்பர் 16ல் விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துல்ளனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக விசாரணக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் நிலை என்ன? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் இன்று உத்தரவாதம் அளித்துள்ளது. ஓபிஎஸ் தரப்பு உத்தரவாதம் கொடுத்துள்ளதால் இனிமேல் அதிமுகவின் கொடி, சின்னத்தை அவர் பயன்படுத்த மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரவாதத்தை மீறினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரும்படி எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.